Tuesday, 21 February 2017

பத்தினி

பணம் இருந்தால் (வாழ) வருகிறேன் என்பவளுக்குப் பெயர் பத்தினி இல்லை.

Friday, 17 February 2017

வாடிவாசல்



முல்லையைத் தழுவி
நெய்தல் பூத்தது
பூவாய்ப் பூத்துக்கிடந்தது.

'வாசலுக்கு வாடி'  என்பவர்கள்
வாடிவாசலுக்கு அழைத்தனர்

கலாச்சாரம் என்றார்கள்
பாரம்பரியம் என்றார்கள்
விளையாட்டு என்றார்கள்
அறிவியல் என்றார்கள்
மணப்பந்தயம் என்றார்கள்
வீரம் என்றார்கள்
இனம் அழியும் என்றார்கள்

எந்த இனம்?
சிரிக்கத்தான் வேண்டும்

மாட்டைப் பிடிப்பதும்
நாட்டைப் பிடிப்பதும் ஒன்றுதான்.
வெட்சி வெற்றியாக.

மனிதனா? மிருகமா?
வேட்டைச் சமூகமுமில்லை - இன்று
வேளாண் சமூகமுமில்லை
காடுமில்லை கழனியுமில்லை.

சூரியனுக்கே கொம்புகள் முளைத்தன

ஆதித் தமிழா !
நீ வீழ்வாயா ?

ஆறுநாளில்
களைத்துப் போனவர்கள்
கலைத்துப் போனார்கள்.

தேசவிரோதிகள்
'
ஆகுபெயர்'  ஆயிற்று.

தொடங்கியது சரி!
நடத்தியது சரி!
முடிக்கத் தெரியவில்லையே!

இப்படி முடிக்கவா
களம் கண்டீர் காளைகளே !


'வெற்றியைப் பெற்றுத் தந்த
சின்னம்மாவுக்கு நன்றி!'

கன்னத்தில் அறையத் தோன்றியது!

சிந்துநதி




மூக்குச் சிந்தியும்
கண்ணீர் சிந்தியும்
ஒன்றாகச் சிந்தினார்கள்
சிந்தியா சிரித்தாள்

சிந்தியா இருப்பாளோ 
சிந்தித்திருப்பாளோ
எதைச்சிந்துவாளோ !

சிந்தியா
சந்தியா போனால்
நிந்தியா நன்மை.

எல்லோரும் சிந்துகிறார்கள்
சிந்துநதி !

நானும் ஊளையிடுகிறேன்!



இரவானதும்
நாய்கள் ஊளையிடுகின்றன
மந்திரக்கோலால்
அதனதன் கதவைத் திறந்து
அதனதன் வாசலில்
வந்தமர்ந்து கொள்கின்றன.

பகலில் எதிர்வருகையில்
என்னை ஒருபொருட்டாக..
கண்டுகொள்ளாத நாய்கள்
இருளில் சிறுஅசைவெனினும்
குரல் உயர்த்துகின்றன.

பிஸ்கட்டுகளை அள்ளி வீசுகின்றன
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளையும் !

கவ்விக்கொண்டதால்
இப்பொழுதெல்லாம்
இரவானதும்
நானும் ஊளையிடுகிறேன்!
ஊஉ... ... ... ஊஉ..

ரயில்பூச்சிகள்.



எத்தனை கவனமிருந்தும்
நிகழ்ந்து விடுகிறது விபத்து.
மோதிக்கொன்றோம்
நானும் ரயில்பூச்சியும்

என் சக்கரத்தில்
நசுங்கியது ரயில்...

ரயிலோட்டத்திற்கு நிற்கும் நான்
ரயில்பூச்சிக்கு நின்றிருக்கலாம்!

இப்பொழுதெல்லாம்
என்னை முந்திச் செல்கின்றன
ரயில்பூச்சிகள்.

பிறகொருபொழுதில்
ஒன்றின்மீது ஒன்றாக
ரயில்பூச்சிகள் நகர்கையில்...
உதட்டில் சிறுபுன்னகையோடு - நானும்
ஊர்ந்து சென்றேன்!

தூங்கும்போது



தூங்கும்போது
கையை எங்கே வைப்பதென்று
தெரியவில்லை.
நெஞ்சினிலே கோர்க்கவா
பின்னந்தலையில் கோர்க்கவா
தலைக்குமேல் வைக்கவா
உடலுக்கு அருகில் கிடத்தவா
ஒருக்களித்துப் படுத்து
ஒன்றைத் தலைக்கு -
இன்னொன்றை உடலோடு படரவிடவா
தூக்கத்தில்
கை எங்கே இருந்ததென்றும்
தெரியவில்லை.
தூங்கும்போது
கையை எங்கே வைப்பதென்றும்
தெரியவில்லை!