முல்லையைத் தழுவி
நெய்தல் பூத்தது
பூவாய்ப் பூத்துக்கிடந்தது.
'வாசலுக்கு வாடி' என்பவர்கள்
வாடிவாசலுக்கு அழைத்தனர்
கலாச்சாரம் என்றார்கள்
பாரம்பரியம் என்றார்கள்
விளையாட்டு என்றார்கள்
அறிவியல் என்றார்கள்
மணப்பந்தயம் என்றார்கள்
வீரம் என்றார்கள்
இனம் அழியும் என்றார்கள்
எந்த இனம்?
சிரிக்கத்தான் வேண்டும்!
மாட்டைப் பிடிப்பதும்
நாட்டைப் பிடிப்பதும் ஒன்றுதான்.
வெட்சி வெற்றியாக.
மனிதனா? மிருகமா?
வேட்டைச் சமூகமுமில்லை - இன்று
வேளாண் சமூகமுமில்லை
காடுமில்லை கழனியுமில்லை.
சூரியனுக்கே கொம்புகள் முளைத்தன
ஆதித் தமிழா !
நீ வீழ்வாயா ?
ஆறுநாளில்
களைத்துப் போனவர்கள்
கலைத்துப் போனார்கள்.
தேசவிரோதிகள்
'ஆகுபெயர்' ஆயிற்று.
தொடங்கியது சரி!
நடத்தியது சரி!
முடிக்கத் தெரியவில்லையே!
இப்படி முடிக்கவா
களம் கண்டீர் காளைகளே !
'வெற்றியைப் பெற்றுத் தந்த
சின்னம்மாவுக்கு நன்றி!'
கன்னத்தில் அறையத் தோன்றியது!
No comments:
Post a Comment