Thursday, 6 October 2016

தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

                                                                    முனைவர் நா. ஜிதேந்திரன்,
                                                                     தமிழ் உதவிப் பேராசிரியர்,
                                                       சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
                                                                     திருநெல்வேலி – 627 011.
        சுட்டெரிக்கும் சூரியனே ஆனாலும்
        தினந்தோறும் வீழ்ந்துதான் ஆகவேண்டும்!
        அது …. மீண்டும் மீண்டும்…
        எழ மறுப்பதில்லை !
        மறப்பதில்லை !
    தன்னம்பிக்கை என்பது வாழ்வின் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரத்தில்தான் நல்ல மாளிகை கட்ட இயலும். தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள இயலாது. தமிழில் கடித இலக்கியம், பயண இலக்கியம், தன்வரலாற்று இலக்கியம் என்பவற்றைப் போல, தன்னம்பிக்கை இலக்கியமும் தனித்த ஒரு துறையாக, தனி இலக்கியப் பிரிவாக வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை குறித்த பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
    இன்று தன்னம்பிக்கை என்று வழங்கப்பட்டு வரும் சொல், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சூழலில் பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்பட வேண்டிய தேவையும், சூழலும் ஏற்படவில்லை. ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கை, தன் வாழ்க்கை என்ற சிந்தனையே மக்களிடத்தில் இல்லை. கூட்டு வாழ்க்கை தந்த ஆதரவு, ஒத்துழைப்பு, அரவணைப்பு முக்கியமாக இருந்தது. அதையும் மீறி, மக்களிடத்தில் சோர்வு ஏற்படும்போது, ‘எல்லாம் அவன் செயல்’, ‘இதுவும் மாறும்’, ‘இந்த நிலை இறுதியல்ல’ என்று நம்பிக்கை கொண்டு காலத்தை நகர்த்தினர். கடைசி வரை அந்த நிலை மாறாதபோது, ‘எல்லாம் விதி’ என்றும், ‘தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?’, ‘போன ஜென்மத்தில் செய்த பாவம்’ என்றும் ‘ஊழ்வினை’க் கோட்பாட்டை நம்பினர். எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று எல்லா இலக்கியங்களின்வழியும் அறிவுறுத்தப்பட்டது. தன்னம்பிக்கை என்ற ஒன்று தேவைப்படவில்லை. அப்படி சாதிக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ அமையவில்லை. வாழ்வு மிக இலகுவாக, எளிமையானதாக… இருப்பதைக் கொண்டு, தனக்கு அமைந்ததை வைத்து, வேலை செய்து, உண்டு, உறங்கிக் கழிக்கும் மனோபாவம் இருந்தது. எந்தக் கோட்டையையும் பிடித்துவிட வேண்டும் என்கிற லட்சியம் எதுவுமற்ற வாழ்க்கை அமைந்திருந்தது. வாழ்வு என்பதிலே தனிப்பட்ட மனிதன் கவனத்தில் கொள்ளப்படாமல், அரசனின் வாழ்வு மட்டுமே கவனத்தில் இருந்தது.
    தன்னம்பிக்கைக்குப் பதிலாக, வேறு பல நம்பிக்கைகளில் தமிழ்ச் சமுதாயம் பழகியிருந்தது. இறை நம்பிக்கை, குரு நம்பிக்கை, அரச நம்பிக்கை, கிரக நம்பிக்கை எனப் பல. வீரம் நிறைந்த சங்க காலத்தில் ‘அரச நம்பிக்கை’ மிகுந்திருந்தது. அரசனின் எண்ணங்களும், லட்சியங்களும் மக்களின் லட்சியங்களாயின. சங்கம் மருவிய காலத்தில், நீதிநெறிக் காலத்தில் ‘குரு நம்பிக்கை’ மிகுந்திருந்தது. ஆசான் காட்டிய வழி, ரிஷி, முனிவர் சொல்லும் வார்த்தைகளில் வாழ்க்கை அமைந்தது. பக்தி இயக்க காலத்தில் ‘இறை நம்பிக்கை’ மிகுந்திருந்தது. பிற்காலத்தில், அது மெல்ல மெல்ல கிரக நம்பிக்கையாகவும் மாறியது. நட்சத்திரங்களும், கோள்களும், ராகு, கேதுவும் மக்களைச் சுற்றி வளைத்துக் கொண்டன. ஆக, முற்காலத்திய தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை பற்றிய சிந்தனைகளும், பதிவுகளும் குறைவே.
    சங்க இலக்கியத்தில் சில வீரர்களிடத்தும், சில புலவர்களிடத்தும் தன்னம்பிக்கை வேறு வடிவத்தில் காணப்பட்டது. தன் வீரத்தின் மீதுள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை. எத்தகைய படைவரினும், தனி ஒருவன் தாங்கி நிற்கின்ற வீரம் காணப்பட்டது.
    “வருவிசைப் புனலைக் கற்சிறை போல
     தனிஒருவன் தாங்கிய பெருமை தானும்”            (தொல். புறம். 65)
என்பதிலே அவனுடைய வீரநம்பிக்கை வெளிப்படுகிறது. யானையை அடக்குதலும், புலிப்பல் வேட்டையும் வீரநம்பிக்கையே. புலவர்களிடத்தில் ‘வித்யாகர்வம்’ எனப்படுகிற தன் புலமையின் மீதுள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை.
    “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”            (புறம்.206)
என்ற ஒளவை பாடல் என்பதிலே புலமை நம்பிக்கை காணப்படுகிறது. ‘யான் ஓர் வாணிகப் பரிசிலேன் அல்லன்’ என்பதும் புலமை நம்பிக்கையே. மற்றபடி, எல்லாமே ஊழ்தான்.
    திருவள்ளுவர்தான் முதன்முதலில்,
    “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
     தாழாது உஞற்று பவர்”                    (குறள். 620)
என்ற தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வைத்தார். ‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் ஃ மெய்வருத்தக் கூலி தரும்’, ‘முயற்சி திருவினையாக்கும்’, ‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’ என்று ஊக்கமுடைமை, வினைத்திட்பம், ஆள்வினை உடைமை போன்ற அதிகாரங்களில் விளக்குகிறார். இப்படி ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தவேண்டிய சூழலில் திருவள்ளுவர் இருந்தார். சங்கம் மருவிய காலம் நாட்டில் குழப்பங்களும், அமைதியின்மையும் நிறைந்திருந்த காலகட்டம் என்றும், தமிழ் சிறப்பொழிந்து இருந்ததாகவும், பாலி மொழி வழக்கிலிருந்ததாகவும், அது தமிழர்களின் இருண்ட காலம் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது. சோர்ந்திருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்ட முயற்சி, செயல் வலிமை, விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலை, இந்த வாழ்வை மாற்ற இயலும் என்ற நம்பிக்கையை முதன்முதலில் திருக்குறள் விதைத்தது. எல்லா நீதி இலக்கியங்களும் ‘செயல் வலிமை’ பற்றிப் பேசின. வழிகாட்டும் குருவின் ‘சொல் வலிமை’ பற்றிப் பேசின.
    ஒளவையார் ஆத்திசூடியில் ‘ஊக்கமது கைவிடேல்’ என்றார்.
    சிற்றிலக்கியக் காலத்திலும் தன்னம்பிக்கை தேவைப்படவில்லை. எப்போதும் யாரையாவது அண்டிப் பிழைக்கிற சமூகத்தில் குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் நிறைந்திருக்க, தன்னம்பிக்கை பெரிதாகத் தேவைப்படவில்லை. அண்டிப் பிழைப்பதைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, தன்னம்பிக்கையோடு புறப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் முதல் மனிதர் பாரதியார்.
    பாரதியாரிடத்திலிருந்தே தன்னம்பிக்கைச் சிந்தனை தொடங்குகிறது; பரவுகிறது. சங்கப் புலவர்களின் அதே ஆளுமையைப் பாரதியாரிடத்தில் காண முடியும்.
    “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ஃ அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் ஃ வெந்து தணிந்தது காடு ஃ தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்  உண்டோ!’ என்று உறங்கிக் கிடந்த அத்தனைபேரின் மனக்காடுகளிலும் தன்னம்பிக்கைத் தீ மூட்டியவர். சோர்ந்து கிடந்தவர்களைத் தட்டியெழுப்பி, உற்சாகப்படுத்தி, வருந்தி அழுந்துபவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நடக்கிறவர்களுக்கு ஓடும் ஆற்றலைத் தந்து நிற்பவை பாரதியாரின் பாடல்கள்.
    “தேடிச்சோறு நிதம்தின்று ஃ பல சின்னஞ்சிறு கதைகள் பேசி ஃ மனம் வாடி மிக உழன்று ஃ பிறர் வாடப் பல செயல்கள் செய்து ஃ நரைகூடிக் கிழப்பருவம் எய்தி ஃ பல வேடிக்கை மனிதரைப் போலே ஃ நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று பாடியவர். ‘பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற வைர வரிகளே தமிழகத்தின் அத்தனை சாதனையாளர்களையும், கலைஞர்களையும் உருவாக்கின.
    ‘நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்று மயிலிறகாய் ஆறுதல் சொல்லி தன்னம்பிக்கையை மனதினில் விதைத்தவர். ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடியவர். பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யும் தன்னம்பிக்கையை வளர்த்தது. பாரதியாரின் காலகட்டத்தில் தன்னம்பிக்கையை மக்கள் மனதில் ஊன்றிய மற்றொருவர் விவேகானந்தர். இருவரும் வாழ்ந்த சமகால அரசியல் நெருக்கடிச் சூழல் தன்னம்பிக்கை குறித்து அவர்களைப் பேச வைத்தது. ஆயினும், அவர்களின் மறைவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகே, அவர்தம் கருத்துக்கள் மக்களிடத்தில் பரவலாக்கப்பட்டன; மேற்கோள்களாக்கப்பட்டன.
    அறிஞர்களுடைய தன்வரலாற்று நூல்கள் தன்னம்பிக்கையைத் தந்தன. எல்லாத் தன்வரலாற்று நூல்களும் தன்னம்பிக்கை நூல்களே! அதனில், உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’ குறிப்பிடத்தக்க ஒன்று. நாடு முழுவதும், நடந்து சென்று, தேடித் தேடிப் பதிப்பித்த அவரது வாழ்விலிருந்து, சற்றும் அயராத உழைப்பிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற முடியும். அடுத்தது, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’ சுயசரிதை. காதுகள் மந்தமாகிப் போன நிலையிலும், உயர்நிலை அடைந்த அவரின் கதையிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற முடியும்.
    தன்வரலாற்று நூல்களிலேயே அதிகம் வாசிக்கப்பெற்ற, இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்கள் இரண்டு. ஒன்று, மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’. அது இந்தியா முழுவதும் தன்னம்பிக்கையையும், உள்ளொளியையும் பாய்ச்சியது. இரண்டாவது, அப்துல்கலாம் அவர்களின் ‘அக்னிச் சிறகுகள்’. தொடர் தோல்விகளால் தொடர்ந்த வாழ்க்கை, அக்னி ஏவுகணையாகப் பறந்தது. காந்தியின் தன்னம்பிக்கை மனதில் வேரூன்றி, உள்ளொளியாக மலர்ந்தது எனில், அப்துல்கலாமின் தன்னம்பிக்கை விண்ணில் சீறிப் பாய்ந்தது.
    தன்னம்பிக்கையைத் தூண்டும்படியாக, பலர் சுயமுன்னேற்ற நூல்களைப் படைத்தனர். எம்.எஸ். உதயமூர்த்தி, மெர்வின், சுவாமி சுகபோதானந்தா, வெ. இறையன்பு, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மரபின் மைந்தன் முத்தையா (நமது நம்பிக்கை) முதலியோர் பலர் தன்னம்பிக்கை நூல்களைப் படைத்தனர்; படைக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக அப்துற் றஹீம் அவர்கள் தன்னம்பிக்கை நூல்களை எழுதினார். ‘தமிழில் வெளிவந்த முதன் தன்னம்பிக்கை நூல்’ என்னும் அடைமொழியோடு 1948இல் அப்துற் றஹீம் அவர்களின் ‘வாழ்க்கையில் வெற்றி’ நூல் வெளியானது.
    சுதந்திரத்திற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்யாகிப் போன வேளையில், தன்னம்பிக்கையை மட்டுமே முன்வைத்து அதிகமான நூல்கள் வெளிவரத் தொடங்கின. ‘கூட்டு வாழ்க்கை சிதையத் தொடங்கிய நிலையில், இனி மற்றவர்களை நம்பிப் பயனில்லை’ எனும்பொழுதில், ‘உன்னையே நீ அறிவாய்’ என்பது முன்வைக்கப்பட்டது.
    மனிதனுக்கு மேலானவையாக இருந்த தெய்வம், அரசன், குரு, நாடு என அனைத்தும் கடத்தப்பட்டு, புகழ் சேர்ப்பதும், பணம் சேர்ப்பதும் முதன்மையான இடத்தைப் பெற்றன. அத்தனை தன்னம்பிக்கை நூல்களும் இவ்விரண்டையே முன்மொழிந்தன. ‘நீயும் சாதனையாளனாகலாம், நீயும் பணக்காரன் ஆகலாம்’ என்று பேராசை காட்டின.
    நீங்களும் வெல்லலாம், வாழ்க்கையில் வெற்றிக்கு ஏணிப்படிகள், தடைகளைத் தாண்டுங்கள், சிகரத்தை நோக்கி, உன்னால் முடியும், நீங்களும் சாதிக்கலாம் என்ற தலைப்புகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்தன. இன்றும் வெளிவருகின்றன. ‘நீங்களும்’ என்பதில் உள்ள ‘உம்’ உளவியல் ரீதியாக மக்களைத் தொட்டது. இந்த ‘உம்’ இழிவு சிறப்பும்மையா?
    தன்னம்பிக்கை என்பது இன்று ஒரு ‘உற்பத்திப் பண்டம்’. உணவைப் போல, மருந்தைப் போல, என்றைக்கும், எல்லாருக்கும் தேவையான பொருள் ‘தன்னம்பிக்கை’. உற்பத்தியாளர்கள் தங்கள் தாய்மொழியில், வாய்மொழியில், கைமொழியில் உற்பத்திப் பண்டத்தைத் தயார் செய்கின்றனர். தன்னம்பிக்கை என்பது வியாபாரக் காந்தமா? (டீரளiநௌள ஆயபநெவ). தன்னம்பிக்கை வார்த்தைகள் ஆடுஆ எனப்படும் வணிகக் கூட்டங்களில் அதிகமாக விற்கப்படுகின்றன. ஒருவனுடைய ஆசையைத் தூண்டி, அதனைத் தன்னம்பிக்கையாக உருமாற்றி, அவனை ஏமாற்றும் தொழிலைக் கொண்டிருக்கின்றன.
    12 ஆண்டுகள் கல்வி பயின்று வெளியேறும் ஒரு மாணவனிடத்தில் தன்னம்பிக்கையை விதைக்க இயலாமல் போகிற கல்விமுறையையும், ஆசிரியர்களையும் கொண்டிருக்கிற நிலைதான் இன்று உள்ளது. கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறுகிற ஒருவன் அல்லது ஒருத்தி அற்ப விஷயங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதை இன்று காண முடிகிறது. மதிப்பெண் குறைவோ, குடும்பத்தில் பிரச்சனையோ, பருவக் காதலோ, வகுப்பறை அவமானமோ…. எதுவாகினும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, வீறுநடை போட வேண்டாமா? இந்நாள் மாணவரும், முன்னாள் மாணவரும்! சமூகத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறபோது, 1ஆம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை அவருக்குப் பாடம் எடுத்த அத்தனை ஆசிரியர்களும் குற்றவாளிகளே! தன்னம்பிக்கை என்பது புகழ் சேர்ப்பது, பணம் பெருக்குவது, அறிவியல் கண்டுபிடிப்பு, கலைச் சாதனை ஆகியவற்றைவிட ‘உயிர்காத்தல்’ இன்றியமையாதது. பாரதியை, விவேகானந்தரை, அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை, தமிழை, இலக்கித்தைப் படிக்க வைப்போம்! உயிர் காப்போம்!
                                                                  

No comments:

Post a Comment