Saturday, 22 October 2016

துரத்து சொந்தம்

எனக்கு
முன்னிரவு நேரம்.
பெருங் கதறல் சத்தம்


பதறியடித்து வந்து பார்த்தேன்
ஒரு பெண்ணை
நாலைந்து பேர் சுற்றி. ..

ஒருவன் அவளை நெருங்க
அவள் கத்துகிறாள் கதறுகிறாள் 


மற்ற நான்கு பேரும்
சும்மா சுற்றி நிற்கிறார்கள்
அவனை மிரட்டுகிற தொனியில். 


பக்கத்துத் தெருவிலிருந்தும்
ஒருவன் பாய்ந்து வந்தான்
கூட்டம் கூடுகிறது
களேபரம் ஆகிறது


காமம் கொண்ட அவனோ
காதல் கொண்டவனோ - ஒரே
குறியாக இருந்தான்!


அவள் கழுத்தில் - அவன்
முகம் வைத்தான்
பற்களை நறநறவென்று கடித்தாள்


எனக்குள் பதற்றம்
ஓடிச்சென்று காப்பதா?
வேடிக்கை பார்ப்பதா? 


அவன் விடுவதாக இல்லை
அவள் சம்மதிப்பதாக இல்லை


ஐந்துபேரின் மிரட்டல் அதிகமாக
அவர்களோடு அவன்
சண்டைக்குத் தயாராக...
என்ன நினைத்தானோ
அவர்களை விட்டுவிட்டு
அவளைப் பின்...தொடர்ந்தான்


அவள் காருக்கு அடியில்
ஒளிந்து கொண்டாள்
அவன் காருக்கு அருகேயே
நின்றுகொண்டிருந்தான். 


அவள் அப்படி ஒன்றும்
பத்தினி இல்லை !
அவனும் அப்படி ஒன்றும்
காமுகன் இல்லை !


அவள் ஏன் மறுக்கிறாள்?
இவன் அவளுக்குத்
தூரத்து சொந்தம்கூட இல்லையா?
வெறும் துரத்து சொந்தம்தானா !


அவள் ஏன் மறுக்கிறாள்?
பொதுவெளியா ?
உடல்வலியா ?
அவனைப் பிடிக்கவில்லையா?
பெண் மறுக்கவும் செய்வாளா?
முடியுமா ?
ஆண் வெறி!


கூட்டம் கலைந்து செல்ல
கதவைச் சாத்தினேன்
அவன்மீது இரக்கத்தோடு.


அவன் விடுவதாக இல்லை!
அவள் சம்மதிப்பதாக இல்லை!


அவளின் கதறல் மட்டும்
இரவைத் தூங்கவிடவில்லை.


காமத்தைப் பொறுத்தவரை
எல்லோருமே
நாய்கள்தான் !

No comments:

Post a Comment